Thursday, August 30, 2007

திருமலையில் துப்பாக்கிச் சூடு இளைஞர் கொலை.

திருகோணமலை அன்புவெளி பகுதியில் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் இப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய முரளி என்பவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் கருணா அம்மான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரென தகவல்கள் கூறுகின்றன.

Wednesday, August 29, 2007

பெரியநீலாவணை எனும் தமிழ் கிராமத்தில் மருதமுனையெனும் பெயர்ப் பலகை!

பெரியநீலாவணை வீ.சீ. வீதியில் அமைந்துள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி காரியாலயத்தின் பெயர்ப் பலகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமும் பெரியநீலாவணை என பதிவு செய்யப்பட்டிருந்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக மருதமுனை எனும் அருகிலுள்ள முஸ்லிம் கிராமத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

பெரியநீலாவணை எனும் தமிழ் கிராமத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் முஸ்லிம் அரசியல் வாதிகள் எடுத்து வரும் நடவடிக்கையின் ஓர் அங்கமே இதுவுமாகும்.

இப்படியான பெயர் மாற்றச் சம்பவங்கள் பல அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, August 27, 2007

வெல்லாவெளியில் இளைஞனின் சடலம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பேரதீவுப்பற்று வெல்லாவெளிப் பகுதியில் நேற்று முன்தினம் பற்றையொன்றுக்குள் இருந்து துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் 33 வயதுடைய சண்முகம் சசீகரன் என்பவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆயுததாரிகளின் நாளாந்த கொலைப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கின்றது!

மட்டக்களப்பு விஜயம் பற்றிய ஆனந்தசங்கரியின் செவ்வி.

ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ள ஈழ விடுதலை கூட்டமைப்பினரான தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ஆனந்தசங்கரி (ரியூஎல்எவ்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த(புளொட்) சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த(ஈபிஆர்எல்எவ் பத்மநாபா) ஸ்ரீதரன் சுகு மூவரும் கடந்த வாரம் அரசாங்கத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து மக்கள் படும் அவஸ்தைகளைக் கண்ணுற்று அதன் படிமங்களை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியைச் சந்தித்து தெளிவுபடுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் விஜயம் சம்பந்தமாக வீ.ஆனந்தசங்கரி அவர்களை பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (பிபிசி) தமிழோசை கண்ட செவ்வியினை கீழேயுள்ள சுட்டியில் கேட்கலாம்.
http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

Saturday, August 25, 2007

தெருவைத் தோண்டிய போது சிக்கிய வெடி குண்டுகள்

கல்முனை சின்னத்தம்பி வீதியினை செப்பனிடும் ஊழியர்கள் தெருவைத் தோண்டிய போது அங்குப்ப் இரு வெடி குண்டுகள் இருக்கக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, பின்னர் அதனை காரைதீவு விசேட அதிரடிப் படையினர் கல்முனை கடற்கரையில் செயலிழக்க வைத்துள்ளனர்.

தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் அழிக்கப்பட்டு வருகின்றது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் பகுதியைக் கைப்பற்றிய ஸ்ரீலங்கா படையினர் அப்பகுதியில் உள்ள நினைவுத் தூபிகளைகளையும் மாவீரர் சமாதிகளையும் இடித்து தரை மட்டமாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பொறிவெடியில் சிக்கிய அதிரடிப் படையினர்

அம்பாறை மாவட்டத்திலுள்ள கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியில் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை மாலை ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 36 வயதுடைய எம்.ஜ.பி.ரொசாந்த, 32 வயதுடைய விக்கிரமராச்சி ஆகிய இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்,

படுகாயமடைந்த இரு விசேட அதிரடிப் படையினரும் தற்போது அம்பாறை அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது.

திருமலை அகதிமுகாம்களில் வெள்ளம்



திருகோணமலை மாவட்டத்தில் கிளிவெட்டி மற்றும் பட்டித்திடல் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் தற்போது மாலை நேரங்களில் பெய்துவரும் அடை மழையின் காரணமாக கூடாரங்களிலும் மற்றும் தங்குமிடங்களிலும் வெள்ளம் உட்புகுவதால் இம்மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

அதி உயர் உச்ச பாதுகாப்பு வலயமாக சிறீலங்கா அரசாங்கம் மூதூர் கிழக்குப் பிரதேசத்தை பிரகடனப்படுத்தியுள்ள இந்நிலையில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் அங்கு மீளக்குடியேற முடியாது என அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்களை பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களிலேயே மீளக்குடியேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கன்னிப் பதிவும் குறிக்கோளும்

இது எனது கன்னிப் பதிவு.
இத் தளத்தில் இலங்கையின் கிழக்கு மண் சம்பந்தமான செய்திகளை பதிவு செய்வதே எனது நோக்கம்.

கிழக்கு மண்ணை "தேனாடு" என்று பண்டைய காலத்தில் இருந்து அழைக்கப்பட்டு வந்ததால் நானும் எனது தளத்துக்கு "தேனாடு" எனப் பெயரிட்டிருப்பது சிறப்பாக இருக்கும் என நம்புகின்றேன்.

கிழக்கு மாகாணத்தின் செய்திகள் அரசியல்ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவது சகலரும் அறிந்ததே, இதனால் இந்தப் பதிவு பொருத்தமானதாக இருக்கும் என்பது எனது கண்கூடு.

இத் தளம் பக்கம் சாராமலும் அரசியலுக்கு சோரம் போகாமலும் கிழக்கு மண்ணின் உண்மைச் செய்தியை பதிவு செய்யும்.