Sunday, September 9, 2007

ஏட்டிக்குப் போட்டியான சுவரொட்டிகள்

சென்னன் குழுவினரால் மட்டக்களப்பு பகுதில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எவ்(நாபா) மற்றும் ரியுஎல்எவ்(சங்கரி)போன்ற அமைப்பைச் சேர்ந்தோர் இப்பகுதியில் செயற்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்னும் தொனியில் இருந்தது.

இச் சுவரொட்டியை கருணா அணியினர் ஒட்டியதாக பரவலாக பேசப்பட்ட போதிலும் அவ் அமைப்பினர் அதனை மறுத்திருந்தனர்.

சென்னன் குழுவின் சுவரொட்டிக்கு பதிலளிக்கும் முகமாக இன்று ஈபிஆர்எல்எவ், புளொட், ரியுஎல்எவ் மற்றும் ஈபிடிபி போன்ற அமைப்புக்கள் இணைந்து கண்டனத்தை தெரிவித்து சுவரொட்டியும் துண்டுப்பிரசுரமும் வெளியிட்டுள்ளனர்.

சென்னன் குழுவினரின் சுவரொட்டிக்கு பதிலளிக்குமுகமாக ஈபிஆர்எல்எவ், புளொட், ரியுஎல்எவ் மற்றும் ஈபிடிபி அமைப்பினர் வெளியிட்டுள்ள சுவரொட்டி, துண்டுப்பிரசுர வெளியீட்டில் தமக்கு எதுவித தொடர்பும் இல்லையெனவும் தங்களின் ஒப்புதலின்றி இப்பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சென்னன் குழுவின் சுவரொட்டிக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லையெனவும் ஈபிடிபி அமைப்பின் மட்டு-அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Friday, September 7, 2007

அமுக்கவெடி விபத்தில் மூவர் கொல்லப்பட்டனர்

மட்டக்களப்பு வந்தாறுமூலை உப்போடை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தில் அமுக்க வெடி விபத்தில் சாரதியான 41 வயதுடைய கிருஸ்ணபிள்ளை வேலுப்பிள்ளை, 17 வயதுடைய தங்கராசா குகன், 41 வயதுடைய கதிர்காமன் தவராசா ஆகியோர் கொல்லப்பட்டனர்.

Thursday, September 6, 2007

கிழக்கில் சிங்கள வலயம் பா.உ.இரா.சம்பந்தன்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரத்தை குறைத்து அங்கே சிங்கள வலயம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு.இரா.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன, அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. கிழக்கில் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் அரசாங்கம், தமிழ் மக்களை அங்கே அடக்கி ஒடுக்கி வருகின்றது. கிழக்கில் இருந்த தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதிக்கத்தை இல்லாமல் செய்யவே மகிந்த அரசாங்கம் இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்கிறது.

எனவே உடனடியாக இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்,கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கள் எவையும் கிழக்கு மாகாண நடவடிக்கைக்காக பெறப்படுவதில்லை.

கிழக்கு இராணுவ நடவடிக்கையால் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாகி விட்டனர். வாகரைக்கு ஜனாதிபதி சென்றார், அங்கே நிகழ்ந்த தாக்குதல்களில் மக்கள் உயிரிழக்கவில்லை என்றார். ஆனால் 300-க்கும் அதிகமான தமிழர்கள் அங்கே உயிரிழந்துள்ளனர். இந்த சாபக்கேடான நடவடிக்கை மூலம் அங்கே ஒரு திட்டமிட்ட நடவடிக்கை நிகழ்வது உறுதிப்படுத்தியுள்ளது.

கிழக்கை சிங்கள மயப்படுத்தவே மூதூர் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம். தமிழர்கள், ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதையே அந்த உயர்பாதுகாப்பு வலயம் கூறி நிற்கிறது.

தமிழ் மக்களைப் போன்றே முஸ்லிம் மக்களும் கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினர் கைப்பற்றிய பகுதிகளில் அரச நிர்வாகத்தை சீர்படுத்தி விட்டதாக அரசாங்கம் கூறுகின்ற போதும் அங்கே அரச நிர்வாகம் நடைபெறவில்லை.

விடுதலைப் புலிகளிடம் இருந்து மக்களை விடுவிப்பதாக கூறி குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் சம்பூரை ஆக்கிரமித்த இராணுவத்தினர் இன்னும் ஏன் அந்தப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்தவில்லை?

சம்பூரில் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அங்கே வீதிகளுக்கு சிங்களப் பெயர் சூட்டுகிறார்கள். தமிழ்- முஸ்லிம் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

நூறு வருடங்கள் பழமை வாய்ந்த காணி உறுதிகளை அங்குள்ள மக்கள் வைத்திருக்கின்றனர். ஆனால் அவை தற்போது அரச சொத்தாக்கப்பட்டு வருகின்றன. பதவியா, புல்மோட்டை, திரியாய், வெலிஓயா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையே புதிய சிங்கள வலயத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, September 5, 2007

விடுதலைப் புலிகள் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இரை!

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை தேவாபுரம் புகையிரத நிலையத்திற்கு அருகில் பகுதியில் நேற்றுக்காலை 10.15 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ஸ்ரீலங்கா படைத்துறைச் செய்திகள் கூறுகின்றன.

கொல்லப்பட்ட இருவரின் சடலங்களுக்கருகில் ரி.56 ரக துப்பாக்கிகள் இரண்டும் கைக்குண்டுகள் இரண்டும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, September 4, 2007

ஆறு தமிழர்களைக் காணவில்லை!

கடந்த 30ஆம் திகதி திருகோணமலை வெருகல் காட்டுப் பகுதியில் வேட்டைக்குச் சென்ற ஆறு தமிழர்கள் இன்னும் வீடு வந்து சேரவில்லையென உறவினர்கள் பொலிஸில் புகார் செய்துள்ளனர்.

இவர்களுடன் வேட்டைக்குச் சென்ற ஏழாவது நபர் இவர்களைக் காணவில்லையென சேருநுவர பொலிஸில் புகாரைப் பதிவு செய்துள்ளார். இவரை சமையல் வேலையைச் செய்யக் கூறிவிட்டு வேட்டையாடவும், மீன் பிடிக்கவும், தேன் எடுக்கவுமென சென்ற அறுவரும் காலையில் இருந்து மாலை வரை உரிய இடம் திரும்பாத நிலையில் மற்றையோரைத் தேடி காட்டினுள் சென்ற போது இராணுவ சீருடையில் வந்த மூவர் இவரைத் துரத்தியதாகவும் அவர்களிடமிருந்து தப்பி இந் நபர் பொலிஸ் நிலையத்துக்கு வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Sunday, September 2, 2007

உயிராபத்தின்றி வெடித்த கிளைமோர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாமுனை கிராம வீதியில் நேற்று காலை 7.30 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என்பதுடன் இப்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஸ்ரீலங்கா படையினால் மீட்கப்பட்ட பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 30, 2007

திருமலையில் துப்பாக்கிச் சூடு இளைஞர் கொலை.

திருகோணமலை அன்புவெளி பகுதியில் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் இப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய முரளி என்பவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் கருணா அம்மான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரென தகவல்கள் கூறுகின்றன.